‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. யுவராஜ் கணேசன் தயாரித்து வெளியிட்ட இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவர் கூறியுள்ளதாவது:-
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும்,இரக்கமும்,உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்.. இல்லை.. இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக் காட்டும் அற்புதமான படம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.
படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.