விழுப்புரத்தில் நடந்த ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ‘மிஸ் திருநங்கை’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். ‘கூவாகம் திருவிழா 2025’ நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார்.
‘மிஸ் திருநங்கை’ போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடியும் தருவாயில் மேடையில் பேசிவிட்டு இறங்கிச் சென்ற விஷால் திடீரென மயங்கி விழுந்தார். மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அவரை எழுப்பி, தண்ணீர் கொடுத்து அவரது காருக்கு அழைத்து சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் பொன்முடியும் காரில் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் நலமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.