‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ படம் எடுப்பது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்கியுள்ளார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிக்குமார், ஏ.ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது, “தமிழ் சினிமாவுக்கு ஒரு கம்பீரமான கதாநாயகன் கிடைத்திருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வளர்ந்து வாருங்கள். ‘ரமணா 2’ எடுப்போம். கேப்டனை மீண்டும் திரையில் காட்டுவோம். இந்த படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. படத்தில் யானையும் ஒரு சிங்கமும் நடித்தது போல இருக்கிறது. கேப்டனின் பழைய பேட்டி ஒன்றில் யானை வாங்கி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது” என்று கூறினார்.