தமிழகத்தில் ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியை கடந்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. மே 16-ம் தேதி வெளியான இப்படம் முதலில் சில நாட்கள் வசூல் குறைவாகவே இருந்தது. இதனால் படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மேலும், திரையரங்க உரிமையாளர்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் என கூறத் தொடங்கினார்கள். தற்போது தமிழகத்தில் ‘மாமன்’ படத்தின் வசூல் ரூ.25 கோடியைக் கடந்திருக்கிறது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. நாயகனாக 3-வது படமும் வெற்றி என்பதால் சூரியும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.