இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்சார் சான்று மறுத்து உத்தரவு பிறப்பிக்கும் முன், சென்சார் போர்டு தன் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கவில்லை எனவும், சென்சார் போர்டின் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருப்பதாகவும், படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய தனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இன்று வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது