பழநி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா இன்று (ஜூன் 5) தனது 46-வது படக்கதையுடன் வந்து தரிசனம் செய்தார்.

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தை, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை நடிகர் சூர்யாவும், இயக்குநர் வெங்கி அட்லூரியும் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். அவர்கள் பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தனர்.

அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். சிறுகால சந்தி பூஜையில் கலந்து கொண்டு, 46-வது படக்கதையை முருகன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேடன் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகர், போகர் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் சூர்யாவுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், படக்குழுவினர் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.