அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்துக்கு நடிகை இஷா கோபிகர் கனத்த நெஞ்சத்துடன் வீடியோவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே உலுக்கியுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்துக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஒருவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார். மருத்துவமனை ஹாஸ்டலில் விமானம் மோதிய நிலையில், அங்கேயும் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1998ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் இஷா கோபிகர். அதே ஆண்டு தமிழில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டு என் சுவாசக் காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே மற்றும் ஜோடி (ஸ்பெஷல் கேமியோ) உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானார். கடைசியாக தமிழில் ஹீரோயினாக விஜயகாந்தின் நரசிம்மா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், பாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆன இஷா கோபிகர் தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 2011ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்புக்கு சின்ன பிரேக் கொடுத்தார்.
2009ம் ஆண்டு டிம்மி நரங் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இஷா கோபிகருக்கு மகள் உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். கடைசியாக சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
நேற்று தனது மகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இஷா கோபிகர் தற்போது அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் ட்வீட் போட்டு வரும் நிலையில், இஷா கோபிகர் கனத்த நெஞ்சத்துடன் வீடியோவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.