தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு!

கோயம்பேட்டில் தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவு வாயில் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவ்வழியாக சென்ற மர்ம நபர் தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டதாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய ரோந்து போலீசார் வாகனத்தில் வைத்து இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அனைத்தனர். இதில் தண்ணீர் பந்தல் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும் தீ வேகமாக பரவியதால் அருகில் வைக்கப்பட்டு இருந்த கட்சி பேனர்களும் எரிந்து நாசமானது.

தீ வைத்த மர்ம நபர் யார் என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சம்பவம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.