நெல்லையில் 90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள்!

நெல்லையில் பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே தனியார் எண்ணெய் மில்லுக்கு வடக்கே இருக்கும் காலி இடத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது தீ வைத்து எரிக்கப்பட்டு கருகிய நிலையில் கிடந்த மூதாட்டியின் உடலை பார்த்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட மூதாட்டி யார்? இது கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் போலீசாரிடம் மூதாட்டி மரணம் குறித்து ரகசிய தகவல் அளித்தார். அதன் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியை சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 30) மற்றும் இவரது சகோதரியான செக்கடி தெருவை சேர்ந்த லெட்சுமணன் என்பவர் மனைவி மேரி (வயது 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பாட்டியின் 90 வயதான சுப்பம்மாள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பெண்கள் இவரை பராமரித்து வந்ததாகவும், தொடர்ந்து அவரை கண்காணிக்க முடியாததால் தகவல் அளித்தவரின் ஆட்டோவில் அழைத்து சென்று எரித்து கொன்றுவிட்டதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.