அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தலைமைச் செயலக வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்வராய் ஓராண்டு; முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் மு.க,ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக முதல்வர் வெளியிட்டார்.

மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக காரில் சென்றார். ராதாகிருஷ்ணன் (ஆர்கே) சாலையில் சென்றபோது காரில் இருந்து கிழே இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் திடீரென ஏறி பயணித்தார்.முதல்-அமைச்சர் அரசு பஸ்சில் திடீரென ஏறியதால் பஸ்சில் இருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பஸ் கண்டெக்டரிடம் பஸ் பயணம் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், பெண் பயணி ஒருவரிடம், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் குறித்து கருத்து கேட்டார். அப்போது பேசிய அந்த பெண், இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம். இந்த திட்டத்திற்கு உங்களுக்கு நன்றி என கூறினார். அதேவேளை, வெள்ளை பலகை (ஒயிட் பொர்ட்) பஸ்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டும்’ என்றார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்-அமைச்சர் அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் பயணத்தை முடித்து பின்னர் காருக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து காரில் பயணம் செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு முதல்-அமைச்சர் சென்றடைந்தார்.