தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 16,000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் 16,000 மெகாவாட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 17 நாட்கள்16,000 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்ட இடங்களை உடனே சரிசெய்ய வேண்டும் என ஆய்வு கூட்டத்தில் தெரிவித்திருக்கிறோம்.

ஒரு வாரமாக 57 ஆயிரம் டன் நிலக்கரி வந்து கொண்டிருக்கிறது. இதனை அதிகப்படுத்த ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம். குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம் பற்றி எதுவுமே தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்.

மின்சாரம் உற்பத்தி செய்ப்பட்டு வெளிமாநிலங்களுக்கு யூனிட் 12 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ததால் மின்தடை ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களைவிட 37 சதவீதம் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்திற்கு முன் கூட்டியே 3,000 மெகாவாட் கொள்முதல் செய்ய கோரப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி 222 மெகாவாட் தான் இருந்தது. தற்போது ஒரு ஆண்டில் 137 மெகாவாட் அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் 6200 மெகாவாட் சொந்த உற்பத்தி செய்யப்படும். மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்றால் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.