டெல்லியில் அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்: நவ்நீத் ரானா

மராட்டிய அதிகாரிகள் எங்களை நடத்திய விதம் குறித்து பிரதமரிடம் புகார் செய்வோம் என ரானா தம்பதி கூறினர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் அருகே, அனுமன் பஜனை பாடப்போவதாக கூறி கைதாகி தற்போது ஜாமீன் பெற்றுள்ள நவ்நீத் ரானா, ரவி ரானா தம்பதியர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லிக்கு சென்று பெண்களை மதிக்கும் அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம். நான் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் உள்ளிட்டவர்களை சந்தித்து, காவல் நிலையத்திலிருந்து சிறை வரையில் நாங்கள் மராட்டிய அதிகாரிகளால் எப்படி மோசமாக நடத்தப்பட்டோம் என்பதை எடுத்து கூறுவோம். நான் இதைப்பற்றி மேலும் புகார் செய்ய போகிறேன்.

எங்களை குழிதோண்டி புதைப்பதாக கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திற்கு எதிராக, இங்கு நாங்கள் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பிரச்சினையை டெல்லியில் எழுப்புவோம்.

நாங்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததன் மூலம், கோர்ட்டை அவமதித்ததாக கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம். எங்கள் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் பேசவில்லை. காவல் நிலையத்திலிருந்து சிறை வரை நாங்கள் எப்படி மோசமாக நடத்தப்பட்டோம் மற்றும் எனது உடல்நல பிரச்சினைகள் எப்படி அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டது என்பதை பற்றி தான் நாங்கள் பேசினோம்.
என்னை போன்ற ஒரு மக்கள் பிரதிநிதியை இப்படி நடத்தினால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?. எனவே நான் பேசுவது முக்கியமானது. அரசியலமைப்பு எனக்கு அதற்கான உரிமையை வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கார் போலீஸ் நிலையம் சார்பில், சிறப்பு கோர்ட்டில் எம்.பி. நவ்நீத் ரானாவின், கணவர் ரவி ரானாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கூறி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:-

குற்றம் வாட்டப்பட்ட எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ. ரவி ரானா இருவரும் விடுதலையானவுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியபோது சிறப்பு கோர்ட்டு விதித்த நிபந்தனையை அவர்கள் மீறியுள்ளனர். இதன்காரணமாக அவர்களின் ஜாமீனை கேர்ட்டு ரத்து செய்வதுடன், அவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். அவர்களை உடனடியாக காவலில் எடுக்க ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.