நாக்பூர் ரயில் நிலையம் அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு

நாக்பூர் ரயில் நிலையத்தில், வெடிபொருட்கள் இருந்த பையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் விட்டுச் சென்ற பை ஒன்று கிடந்தது. அதில் இருக்கும் பொருட்கள் குறித்து சந்தேகம் நிலவியதால் ரயில்வே போலீசாரால், வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். நிபுணர்கள் சோதனையில், அந்த பையில் 54 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் இருப்பது தெரிந்தது. நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு, உடன் அவற்றை செயல் இழக்கச் செய்தனர்.

இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:

பையில் இருந்த வெடிபொருட்கள் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை அல்ல. இருப்பினும் தக்க சமயத்தில் அவை செயல் இழக்கச் செய்யப்பட்டன. அசம்பாவிதம் ஏற்படுத்தும் வகையில் இந்த பையை இங்கு விட்டுச் சென்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மர்ம நபர்கள் விரைவில் பிடிபடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.