நீட் தேர்வினால் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளை: அமைச்சர் பொன்முடி

நீட் நுழைவு தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் ஏழை மாணவர்களிடம் கொள்ளையடிப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை அமைய அரசு உதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்று வருகிறது. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கியது. பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்றார். தலைசிறந்த முதல்வர் பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பாராட்டினார்.

நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு, டிகிரி உள்ளிட்ட பட்டபடிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அமைய அரசு உறுதியாக உள்ளது. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது. மாநிலங்களின் உரிமை கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.

மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும். அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம் என்று கூறினார் அமைச்சர் பொன்முடி. மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தில் சமூக நீதிக் கொள்கையுடன் செயல்பட வேண்டும். கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதையே ஆளுநரிடம் கோரிக்கையாக விடுகிறோம். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.