அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் கல்யாணம் பண்ணி வைக்க கோரிக்கை!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்றுமுன்தினம் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, ஒரு வீட்டில் இருந்த 65 வயது முதியவர், ‘‘பென்ஷன் எல்லாம் சரியாக கிடைக்கிறது. ஆனால் 65 வயதான நிலையிலும் எனக்கு இதுவரை திருமணமே நடக்கவில்லை. தனியாக வாழ்ந்து வருகிறேன். எனவே எனக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? என கேட்டார்.

இந்த கேள்வியால் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலை எழுந்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா, ‘‘எங்களால் பென்ஷன் மட்டும்தான் தர முடியும். திருமணம் எல்லாம் செய்து வைக்க முடியுமா?’’ என சிரித்தபடி கூறினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.