சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா குற்றவாளி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான இவர், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 26ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சிபிஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.