வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம்: காடுவெட்டி குரு மகள்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகனை தலைவர் ஆக்கியதன் மூலம் வன்னியர் சமுதாய மக்களுக்கு ராமதாஸ் துரோகம் செய்துள்ளதாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கூறினார்.

இது தொடர்பாக விருதாம்பிகை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2004ஆம் ஆண்டு வரை மிஸ்டர் அன்புமணி யாரென்று கூட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு தெரியாது. எனது தந்தை மாவீரன் காடுவெட்டி ஜெ. குரு அவர்கள் சுயநலம் பார்க்காமல் மிஸ்டர் அன்புமணியை கட்சிக்கு கொண்டுவந்து மத்திய அமைச்சர் ஆக்கினார். எனது தந்தை சொன்னதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் கேட்பார்கள் என்பதால் டாக்டர் திரு.ராமதாஸ் என் தந்தையிடம் கேட்டுக்கொண்டதால் என் தந்தை சுயநலம் பார்க்காமல் கட்சியில் மிஸ்டர் அன்புமணியை வளர்த்து விட்டார். இதை நான் இங்கு குறிப்பிட காரணம் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வளரும் காலங்களில் எந்த அரசியல் தலைவர்கள் செய்யாத செயலை செய்தார். எனது குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று மேடைதோறும் பேசினார். எனவே தற்போது தன் மகனை கட்சிக்கு கொண்டு வந்தால் கட்சியில் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் என் தந்தை காடுவெட்டி குரு அவர்கள் சொன்னால் ஒட்டுமொத்த கட்சியும் வன்னியர் சொந்தங்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் நீதான் குரு, தம்பி அன்புமணியை பெரிய ஆளாக்க வேண்டும் என்று என் தந்தையிடம் டாக்டர் திரு.ராமதாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார். ஆனால் அதன் பிறகு டாக்டர் திரு.ராமதாஸ் அவர்களும் மிஸ்டர் அன்புமணி அவர்களும் என் தந்தை காடுவெட்டி ஜெ .குரு விற்கு செய்தது என்ன. என் தந்தையின் வளர்ச்சி பிடிக்காமல் எனது தந்தையை தீர்த்துக்கட்ட சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் என் தந்தை காடுவெட்டி ஜெ. குரு அவர்களை எதிர்த்து நின்று இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. என் ததைந்யே டாக்டர் திரு.ராமதாஸ் மூத்த மகன் என்றும் மிஸ்டர் அன்புமணி எனது தந்தையே அண்ணன் என்றும் கூறி சூழ்ச்சி செய்து எனது தந்தையின் இறுதிக் காலம் வரை என் தந்தையிடம் நடித்தனர்.

சுதந்திர இந்தியாவில் யாருமே நான்கு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால் என் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த நிலையிலும் என் தந்தை எங்கள் வன்னியர் மக்களுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தார். அதுமட்டுமல்லாமல் கட்சி நலனுக்கா ஊர் ஊராக சென்று பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்து வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிதியை திரட்டி வன்னியர் நலனை பாதுகாத்தார். ஆனால் டாக்டர் திரு.ராமதாஸ் அவர்கள் எனது தந்தை இறப்பிற்கு பிறகு வன்னியர் கல்வி அறக்கட்டளையை தனது குடும்ப சொத்தாக டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1987 வன்னியர் இட ஒதுக்கீடு போரில் சுட்டுக்கொல்லப்பட்ட 25 சமூக நீதிப் போராளி குடும்பங்களுக்கு டாக்டர் திரு. ராமதாஸ் செய்தது ஒன்றுமே இல்லை. ஐயா முத்தமிழ் அறிஞர் திரு.கலைஞர் அவர்கள்தான் 25 குடும்பகளுக்கு 3 லட்சமும் பணமும், மாதம் மாதம் ஓய்வு ஊதியம் வழங்கினார். பிறகு தற்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் உயிர் நீத்த 25 குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அவர்களுக்கு விழுப்புரத்தில் மணி மண்டபம் கட்ட ஆணையிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் அவர்கள் போட்ட தவறான அரசியல் கணக்குகள் பாட்டாளி மக்கள் கட்சி வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது எனது தந்தை காடுவெட்டி ஜெ.குரு அவர்கள் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தனித்து நிற்க வேண்டும் என்று டாக்டர் திரு.ராமதாஸ் அவர்களிடம் வாதிட்டார். ஆனால் அதற்கு டாக்டர்.திரு ராமதாஸ் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. அப்போது என் தந்தை நீங்கள் தனித்து நிற்கவில்லை என்றால் நான் வன்னியர் சங்கத்தை தனியாக பிரித்து தனியாக நிற்பேன் என்று கோபப்பட்டார். அப்போது பிரச்சினையை உணர்ந்து கொண்ட திரு .ராமதாஸ் அவர்கள் தனித்து நிற்க ஒப்புக்கொண்டார். அப்பொழுது கூட டாக்டர் இராமதாஸ் அவர்கள் தனது மகன் மிஸ்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நினைத்து என் தந்தையிடம் வேண்டினார். அப்போது கூட என் தந்தை தான் தான் கட்சியில் சீனியர் என்பதை பொருட்படுத்தாமல், கட்சி வளர வேண்டும் வன்னியர் சமூக நலனே முக்கியம என்ற ஒரே நோக்கத்திற்காக மிஸ்டர் அன்புமணி முதல்வர் வேட்பாளராக ஒத்துக்கொண்டார். இவ்வளவு துரோகங்களை திரு.ராமதாஸ் செய்துவிட்டு தற்போது தனது மகனை பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ஆக்கி உள்ளார்.

மிஸ்டர் அன்புமணி தலைவர் ஆவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மிஸ்டர் அன்புமணி இந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எங்கள் வன்னியர் சமூகத்துக்கும் செய்தது என்ன என்ற ஒரே கேள்வியை மட்டும் நான் கேட்கிறேன். ஏன் என்றால் மிஸ்டர் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆன போது செய்த ஒரே காரியம் தனது அலுவலகத்திற்கு வெளியே கட்சிக்காரர் மற்றும் சாதிக்காரர்கள் என என் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்று போர்டை வைத்தார். சொத்துக்காக இவ்வாறு இருக்க மிஸ்டர் அன்புமணியை தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆக்கியதால் என் வன்னிய சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறார்.

மேலும் டாக்டர் .திரு ராமதாஸ் அவர்களிடம் நான் கேட்கிறேன் வன்னியர் உரிமைப் போரில் உயிர் நீத்த 25 குடும்பங்களில் ஒருவர் இல்லையா பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக்க. உங்கள் மகனை ஏன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஆக்கி உள்ளீர்கள் என்று தெரியும். ஐயா டாக்டர் திரு .ராமதாஸ் அவர்களே வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்து உங்களை விட்டு போக கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தானே ஐயா. நமது வன்னிய சொந்தங்களே நான் உங்களை என் பின்னால் அணி திரளுங்கள் என்று கூறவில்லை. நான் அவ்வாறு செய்தால் நான் சுயநலத்திற்காக பேசுகிறேன் என்று அர்த்தம். நீங்கள் விரும்பும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணையுங்கள். அது உங்களின் உரிமை. பாட்டாளி மக்கள் கட்சி என்றால் அது மாவீரன் காடுவெட்டி ஜெ .குரு அவர்களின் கட்சியே. அவரையே துரோகத்தால் விழுத்திய இவர்களுக்கு நம் சாதாரண வன்னிய குல சத்திரியர்களை என்ன செய்வார்கள்.

மேலும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நம் வன்னியர் குல தெய்வமான மாவீரன் காடுவெட்டியார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வன்னியர் சமுதாயத்திற்கும் செய்த தியாகத்தை கூட இவர்கள் பேசவில்லை வன்னியர் உரிமைப் போரில் உயிர்நீத்த 25 தியாகிகளை பற்றியும் பேசவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் நம் வன்னியர் குல சொந்தங்களை கட்சி பணியை செய்யவில்லை என்று அய்யா ராமதாஸ் கூறுகிறார். நான் சொல்கிறேன் என் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் எந்த மற்ற கட்சிகள் போல் எதிர்பார்ப்பு இல்லாமல் சமுதாய நலன் கருதியே உழைத்தார்கள். நீங்கள் மாறி மாறி கூட்டணி வைத்து விட்டு என் பாட்டாளி சொந்தங்களே குறை கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு விருதாம்பிகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.