பாஜக வளர்ச்சிக்கு திமுக அரசே உதவுகிறது: வானதி சீனிவாசன்

பாஜக அரசு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுக் கால சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜக அரசின் சாதனைகள் பட்டியலிட்ட பிரசுரங்களைக் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார். பாஜக அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட அட்டைகளையும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

உலக நாடுகளை கொரோனா பாதிப்பு அச்சுறுத்திய சூழலில் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கி மக்களைப் பாதுகாத்த தலைவராகப் பிரதமர் உள்ளார். மேலும் உணவு தானியம், தடுப்பூசியைத் தாண்டி, சிறு குறு தொழில்களுக்குப் பிரதமர் மோடி உதவியுள்ளார்.
பெண்களைப் பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தி உள்ளார். டிஜிட்டல் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளார். அதேபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகம் அதிக பலன் அடைந்து உள்ளது. முத்ரா கடன் தமிழகத்திற்கு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. செல்வ மகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழகம் பயன் அடைந்து உள்ளது.
தொழில்துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது.

சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உலக அளவில் கூட்டமைப்பை உருவாக்கியவர் பிரமதர் மோடி. மேலும் பிரதமர் தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களைக் கொண்டு கொண்டுவந்தவர். இஸ்லாமியப் பெண்களுக்குத் திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சரவையில் மொத்தம் 11 பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பெண்கள் சொந்தமாகத் தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தத் தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் இருந்த பிரதமர்களின் வாழ்க்கைகளை தெரிந்துகொள்ள அலுவலகத்தை அமைத்துள்ளார். மேலும் நதிகளை இணைக்கப் பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்காக தமிழகமும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும். வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதில் பிரதமர் லட்சியமாக உள்ளார். கலவரங்கள் இல்லாமல் மக்கள் இணக்கத்துடன் வாழ வேண்டும். மத சுதந்திரத்தைக் காக்கும் அரசாக இந்த அரசு உள்ளது.

திமுக எந்த வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வாக்குறுதிகளைக் கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்துள்ளது.

மீண்டும் மீண்டும் பாஜக ஆதரவாளர்களைக் கைது செய்வதன் வாயிலாக பாஜக வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம். கருத்துக்களைப் பொதுவெளியில் சட்டத்திற்கு உட்பட்டுச் சொல்வதற்கும், அதேபோல விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியைப் போலக் கைது செய்வது மாநிலத்தின் கருத்துச் சுதந்திரமா? அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.