இந்தியாவின் தேசியகோவிலாக ராமர்கோவில் இருக்கும்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் எனவும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா தகவல் தெரிவித்திருந்தார். மேலும், கோயில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணி முழுமையடைந்ததும், கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அவர் பேசியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி வைத்தார். பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. கர்ப்பகிரஹத்தில் கற்கள் வைக்கும் சடங்கு இன்று நடந்தது. இதில் நான் பங்கேற்றது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தியாவின் தேசிய கோவிலாக ராமர் கோவில் இருக்கும். இந்த நாளுக்காக மக்கள் நீண்ட காலம் காத்துள்ளனர். ராமர் கோவில் இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.