பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று காலை ஏராளமான பாஜகவினர் திரண்டனர். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அங்கு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக புறப்பட்ட பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அண்ணாமலையுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, கட்சியினர் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5000 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.