பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பணமோசடி வழக்கு தொடர்பாக, தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ப் இந்தியா (பிஎப்ஐ) உடன் தொடர்புடைய 23 வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும் பண மோசடியில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த அமைப்புகள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த இரு அமைப்புகளுக்கு சொந்தமான 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமான 23 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 59,12,051 முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 9,50,030 முடக்கப்பட்டுள்ளது. இரு இயக்கங்களுகும் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ. 68.62 லட்சம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

“2009 ஆம் ஆண்டு முதல் பிஎப்ஐ -இன் வங்கி கணக்குகளில் ரூ.30 கோடிக்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகைகளுடன் ரூ.60 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2010 முதல் ஆர்எப்ஐ-இன் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.