வயலில் வெள்ளை வேட்டியுடன் விவசாயம் செய்வது ‘திராவிட மாடல்: அண்ணாமலை

வயலில் சிவப்பு கம்பளம் விரித்து நடப்பதும், வெள்ளை வேட்டி சட்டையுடன் விதை நெல் பாவுவதும் தான் ‘திராவிட மாடல்’ ஏமாற்று வேலை என பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

பழநி புஷ்பத்தூர் ஊராட்சி, வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க., தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. அதை எழுதிய டி .ஆர். பாலுவிடம் கேட்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். தமிழகத்தில் எது நடந்தாலும் திராவிட மாடல் ஆட்சி என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி சட்டையுடன் விவசாயம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்று வேலை. இந்தியாவில் அதிக பொய் பேசுவதில் நம்பர்-ஒன் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து புள்ளி விபரங்களை தெரிவித்ததாக அறிவித்த பின் சில அமைச்சர்கள் என்னிடம் தூது விடுகின்றனர். எல்லாம் கோபாலபுரத்தில் இருந்துதான் முடிவு எடுக்கப்படுகிறது. எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கின்றனர். தமிழக நிதியமைச்சர் அமெரிக்காவில் 2 வங்கிகளை திவால் செய்து விட்டு வந்தவர். பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்னை முதல் உள்நாட்டு நக்சலைட் பிரச்னை வரை குறைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியை தமிழக முதல்வர் கட்டித் தழுவுகிறார்.

சென்னையில் பட்டப்பகலில் முகத்தை மறைக்காமல் கூலிப்படையினர் நடுரோட்டில் கொலை செய்கின்றனர். தி.மு.க., ஆட்சியின் இரண்டாவது வருட துவக்கத்தில் மகன், மருமகன், இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது பவர் சென்டராக ஸ்டாலின் மனைவி உருவாகியுள்ளார். தமிழக அரசு உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க ஸ்வேட்டர் கம்பெனிக்கு ரூ. ஒன்றரை கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இதுபோல டிராவல் ஏஜென்சி கம்பெனிக்கும் பணம் கொடுத்து உள்ளது போல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளில் இருந்து 3 ஆயிரம் பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.