சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும்: சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு – செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை கொடுக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் கோவில் பொதுவானது என்பதுதான் நீதிமன்ற தீர்ப்பு. உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்பதுதான் மனுநீதி; மனுதர்மம்.

கோவிலில் எழும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களது கடமை. பக்தர்களின் புகார் தொடர்பாக நிச்சயம் விசாரணை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இல்லை. அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்க அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம்?. இவ்வாறு அவர் கூறினார்.