மோடியின் ஆட்சியில் நக்சல் பிரச்னை குறைக்கப்பட்டுள்ளது: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில், தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாட்டில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் நக்சல் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தன. இதனால் இங்கு வளர்ச்சி சாத்தியப்படாமலேயே இருந்தது. கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மலர்ந்த பின், வடகிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் வாயிலாக அங்கு வளர்ச்சி சாத்தியமானது.

கடந்த 2006 – 14 வரையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது வட கிழக்கு மாநிலங்களில் 8,700 அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் அவை 1,700 ஆக குறைந்துள்ளன. களத்தில் வீரர்கள் உயிரிழப்பு 304ல் இருந்து 87 ஆகவும், பொதுமக்கள் பலியாவது 1,990ல் இருந்து 217 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.