காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லா விமானம்!

காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், ஆர்னியா பிரிவில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதியில் இன்று அதிகாலையில் 4.30 மணியளவில் வானில் மின்னும் ஒளியுடன் ஒரு பொருள் தோன்றியது. அது ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அதன் மீது பி.எஸ்.எப். வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த ஆளில்லா விமானம் திரும்பி சென்றது. இதனை பி.எஸ்.எப். படையினர் உறுதி செய்துள்ளனர்.