எந்த வழக்கையும் சந்திக்க தயார்: அண்ணாமலை

எந்த வழக்கையும் சந்திக்க தயார்; வழக்கு தொடர்ந்து வாயை அடைக்க முடியாது அண்ணாமலை கூறினார்.

சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் உள்ள எஸ்.டி.நகரில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து, குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அவர் மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும் திட்டங்களை விளக்கி கூறினார். அதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை ஆளும் தி.மு.க. செய்து வரும் ஊழல் குறித்து கூறினால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான 2-வது பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அந்த பட்டியல் முதல் பட்டியலை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

எந்த காரணத்திற்காகவும் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பா.ஜனதா உறுதுணையாக இருக்கும். ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மதுரை ஆதீனம் மீது அமைச்சர் கங்கணம் கட்டிக்கொண்டு பேசி வரும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜனதாவை, தி.மு.க. தான் உருவாக்கி கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.