குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல்: ஸ்வப்னா சுரேஷ்

முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கு கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இங்கு விசாரணைக்கு ஆஜரான ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதனைத்தொடர்ந்து வாக்குமூலத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள், அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு பேட்டி அளித்தார். இந்த பேட்டி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகள் முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷ் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக அமலாக்கத்துறையினர் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில், கேரள முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு, ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் மூலமாகவும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்னை ஷாஜி கிரண் என்ற ஒரு நபர் நேரில் சந்தித்து முதல்-மந்திரி மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் கே.டி.ஜலீல் கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்கக் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷும் பி.எஸ். சரித்தும் கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவில், முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா் அறிமுகம் செய்து வைத்த ஷாஜி கிரண் என்பவா், தன்னிடம் சமரசம் பேச முயன்றாா் என்று ஸ்வப்னா சுரேஷ் குறிப்பிட்டிருந்தாா். அந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி விஜு ஆப்ரஹாம் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி, ஜாமீன் வழங்கக் கூடிய பிரிவுகளின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தாா். மேலும், பி.எஸ்.சரித்தின் பெயா் இந்த வழக்கில் சோ்க்கப்படவே இல்லை என்றும் நீதிபதி கூறினாா்.

இந்நிலையில் முதல்வர் பினராய்விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் கேரளா முழுவதும் பிரியாணி பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல பகுதிகளில் பினராய் விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் இளைஞர் காங்கிரசார் பிரியாணி பாத்திரங்களுடன் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டினர். ஆனாலும், கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்பட பல இடங்களில் பிரியாணி சமைத்து போராட்டம் நடத்தப்பட்டது. கொல்லம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.