பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும். இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா காலத்தில் குறைந்த நாட்களே நேரடி வகுப்பு நடந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பள்ளிகளில் வாழை மரம், தோரணம் கட்டி ஆசியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.