ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியர் கவனித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டது. ரயிலானது இன்று வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின் அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. ரயிலானது ராமநாதபுரம்-உச்சிப்புளி இடையேயுள்ள வாலாந்தரவை ரயில் நிலையத்தை காலை சுமார் 7.20 மணியளவில் நெருங்கியது.
அப்போது வாலாந்தரவை ரயில்வே கேட் ஊழியர் வீரப்பெருமாள் தண்டவாளத்தை சரிபார்த்து வந்துள்ளார். ரயில்வே கேட் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமார் 8 சென்டி மீட்டர் அகலத்துக்கு விரிசல் இருப்பது தெரியவந்தது. விரிசல் கண்டறியப்பட்ட நிலையில் பயணிகள் விரைவு ரயிலும் அப்பகுதியை நெருங்கி வந்தது. உடனே தான் வைத்திருந்த சிவப்புக் கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் 200 மீட்டருக்கு ஊழியர் வீரப்பெருமாள் ஓடினார். அதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார். அதனால், ரயில் மெதுவாக வந்து விரிசலைக் கடந்து நின்றது.

தகவல் அறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சீர்படுத்தினர். அதன்பின் ரயிலானது சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. ரயில் தக்க நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலை விபத்திலிருந்து தவிர்க்கும் வகையில் செயல்பட்ட ஊழியர் வீரப்பெருமாளை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினர்.