சிறுமியின் கருமுட்டை விற்பனை: சிறப்பு மருத்துவக்குழு விசாரணை!

16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்ற பெண் புரோக்கர் மாலதியிடம் மருத்துவக்குழு மற்றும் போலீசார் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்துகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைகளில் கருமுட்டை தானம் என்ற பெயரில் முறைகேடாக 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை நடந்ததாக புகார் வந்தது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி என்ற பெண் மற்றும் சிறுமியின் வயதை அதிகரித்து போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில், ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் முறைகேடாக ஈரோடு, பெருந்துறை மட்டுமின்றி, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் மூலம் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக தலைவரும் இணை இயக்குனருமான (சட்டம்) டாக்டர் அ.விஸ்வநாதன் மற்றும் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஈரோடு வந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரணை நடத்தியதுடன், போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் கேட்டு அறிந்தனர்.

இந்தநிலையில் கருமுட்டை விற்பனை தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தும் வகையில் புரோக்கர் மாலதி, சிறுமியின் தாயார், தாயாரின் கணவர், போலி ஆதார் தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதுதொடர்பான மனு ஈரோடு மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனு ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று புரோக்கர் மாலதியை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதன்படி பெண் புரோக்கர் மாலதியிடம் மருத்துவக்குழு மற்றும் போலீசார் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்துகின்றனர்.