அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வலுக்கும் போராட்டம்: ரெயில்களுக்கு தீ வைப்பு!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். பல இடங்களில் ரெயில்களை மறித்தனர். பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதே போல தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் நிலவுகிறது.

உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செகந்திரபாத் ரெயில் நிலையத்திலும் ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பயணிகள் ரெயிலை தீ வைத்து எரித்ததுடன் ரெயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலமான தெலுங்கானாவிலும் போராட்டம் பரவி உள்ளது.