கடலில் காற்றாலை மின் நிலையம்: தமிழக அமைச்சர் ஸ்காட்லாந்து பயணம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 8,600 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. இவை, நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில், கடலிலும் காற்றாலை மின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடலில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதால், எப்போதும் மின்சாரம் கிடைக்கும். இதற்கான செலவும் அதிகம் என்பதால், நம் நாட்டில் கடல் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்க ஆர்வம் காட்டப்படவில்லை.

தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில், கடல் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு மாநிலங்களிலும், 30 ஆயிரம் மெகாவாட் திறனில், கடல் காற்றாலை மின் நிலையங்களை, 2030ம் ஆண்டிற்குள் அமைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு, தேசிய காற்று சக்தி நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடலில், 16 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க உள்ளது.

தமிழக மின்வாரியமும் கடல் காற்றாலை மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்கராஜன், மின் வாரிய மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர், ஸ்காட்லாந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். இக்குழுவினர், அந்நாட்டின் கிளாஸ்கோ நகருக்கு சென்று, கடலில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்களை பார்வையிட உள்ளனர். அதன்பின், வரும், 25ம்தேதி தமிழகம் திரும்புவர்.