ஹிமாச்சல் பிரதேசத்தில் அந்தரத்தில் நின்ற ரோப் கார்: 11 பேர் மீட்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்ற ரோப் காரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சோலன் மாவட்டம் பர்வானு அருகே நேற்று பிற்பகலில் 4 பெண்கள், 2 முதியோர்கள் உள்பட 11 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப் கார் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்றது. மேலும், கீழ் மலைப் பகுதியில் 5 பயணிகளுடன் சென்ற ரோப் காரும் நின்றது. இந்நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்புப் படையினர் இணைந்து நடு மலைப் பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை 4 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

இதுகுறித்து ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியதாவது:-

சுற்றுலாப் பயணிகள் 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் குழுவினர் சிரமப்பட்டனர். தேசிய பேரிடர் குழுவை விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பியதற்கும், விமானப் படையை தயார் நிலையில் வைத்திருந்ததிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு ரோப் கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த சம்பவம் நடந்திருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.