தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்

அதிமுகவில் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு நிலவி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகியுள்ள நிலையில், மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-

மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுகவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கேசவன் தீக்குளிக்க முயன்றுள்ளார். அவர் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளராவார். அவர் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.