அதிமுகவினர் கைகுலுக்கியது நெகிழ்ச்சி: தொல். திருமாவளவன்

வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயைக் காண சென்றபோது, அங்கு அதிமுகவினர் தன்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியது நெகிழ்ச்சியாக இருந்ததாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி, இன்று காலை முதலே வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. கூட்டம் நடந்த ஸ்ரீவாரு மண்டபத்தின் முன்னும் சாலைகளிலும் அதிமுகவினர் பலர் கூடியிருந்தனர்.

இந்நிலையில், வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயைக் காணச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவனை, அதிமுகவினர் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியதாகவும் அது தனக்கு நெகிழ்வாயிருந்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

“அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.