அசாமில் மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு ராகுல் வேண்டுகோள்!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

அசாமில் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொள்ளும் எங்கள் சகோதர சகோதரிகளுடன் என் எண்ணங்கள் உள்ளன. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.