ராணுவ தளவாடப் பொருள்கள் ஒத்துழைப்பு: இந்திய-ஆஸ்திரேலிய ஆலோசனை!

இந்திய-ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ராணுவ தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் நான்கு நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது ராணுவ தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் இரு நாட்டு ராணுவ வீரர்களின் திறன்களை வளர்ப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகளின் தரப்பில் கூட்டாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஜெனரல் விபின் ராவத் பெயரில் நிகழாண்டு பிற்பாதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் திட்டமான “ஜெனரல் ராவத் இளம் ராணுவ வீரர்கள் பரிமாற்றம்” திட்டத்தைத் தொடங்க இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். (இத்திட்டம் கடந்த மார்ச் மாதம் இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்ற உச்சி மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டதாகும்). அத்துடன் இரு நாடுகளும் சந்திக்கும் ராஜாங்க ரீதியிலான சவால்கள், பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆலோசித்தனர்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நிலையில் இந்த பிராந்தியத்தின் நலன் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா நடத்தும் இந்திய-பசிபிக் ராணுவ பயிற்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்தார். பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, பொதுநலன்கள் மற்றும் ஜனநாயகத்தின் விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக இரு நாட்டு ராஜாங்க ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகத்தன்மையை வளர்த்தல், ராணுவப் பயிற்சிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.