தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

இன்று நடைபெறும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை உச்சகட்டத்தில் உள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் என்ற பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அதிமுக சட்ட, திட்ட விதி 20A(v)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், அதிமுக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம் என்ற பெயரில் கட்சியின் சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-6-2022 – திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கட்சியின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். அதிமுக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக கூறும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.