கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா: வானதி சீனிவாசன்

கடந்த 1998ல் நடந்த கோவை கலவரத்திற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா? என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குஜராத் கலவரத்தில், அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குஜராத்தில், 2002-ல், கரசேவகர்கள் வந்த ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டதில், ராம பக்தர்கள் 59 பேர் உடல் கருகி பலியாகினர்; அங்கு கலவரம் மூண்டது. இதில், 59 பேர் எரிக்கப்பட்டது குறித்து கவலைப்படாதவர்கள், கலவரத்திற்கு காரணம் என மாநில அரசையும், அன்றைய முதல்வர் மோடியையும், குற்றவாளி கூண்டில் நிறுத்தினர். மோடி தலைமையிலான குஜராத் அரசு, மூன்று நாட்களுக்குள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதன்பின், 20 ஆண்டுகளில் குஜராத்தில் எந்தவொரு கலவரமும் இல்லை.

கடந்த, 1998ம் காலகட்டத்தில் தமிழகத்தின் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு; போக்குவரத்து காவலர் செல்வராஜ் பயங்கரவாதிகளில் கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த கலவரமும் யாராலும் மறக்க முடியாத கருப்பு பக்கங்கள். இதற்காக, அன்றைய முதல்வர் கருணாநிதியை யாரும் பொறுப்பேற்கச் சொல்லவில்லை. ஆனால், குஜராத் கலவரத்தை முன்வைத்து, மோடியை அரசியலில் இருந்தே அகற்ற, 2004 முதல் 2014 வரை, மத்தியில் அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. அத்தனை சதிகளை, சத்தியத்தின் துணை கொண்டு, வெற்றி கண்ட மோடியின் மன வலிமை பிரம்மிக்க வைக்கிறது. உண்மை அவர் பக்கம் இருந்ததால் அவர், இன்று நாட்டின் பிரதமராகி உலக தலைவராக உயர்ந்து நிற்கிறார். இவ்வாறு வானதி கூறியுள்ளார்.