எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா!

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சுனாமியாக சுழன்றடித்து கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எதிரெதிர் துருவங்களாக மாறியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தினந்தோறும் ஏராளமான தொண்டர்கள் சந்தித்து ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லம் தொண்டர்களால் நிறைந்தே இருக்கிறது.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு இருக்கிறது. அறிகுறிகள் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் தொற்று பாதிப்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அறிகுறிகள் இல்லாத சூழலிலும் அவருக்கு லேசான தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் எடப்பாடி பழனிசாமியும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் ஆதரவாளர்கள், தொண்டர்கள் நலன் கருதி நேற்று தனது வீட்டில் எந்த ஆலோசனை கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. ஏற்கனவே திட்டமிட்டிருந்த முக்கிய நபர்களின் சந்திப்பையும் அவர் தவிர்த்துவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வழக்கமாக நடந்து வந்த தொண்டர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது.