நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை!

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தை வருபவர் கண்ணையா லால். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக கண்ணையா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் விடுதலையானார். ஜாமினில் வந்த பின்னர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கண்ணையா போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால், கண்ணையாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கண்ணையாவின் தையல் கடைக்கு நேற்று மாலை ரியாஸ் அக்தரி மற்றும் ஹவூஸ் முகமது ஆகிய 2 பேர் வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர். தனக்கு புதிதாக சட்டை தைக்க வேண்டும் என அக்தரி கண்ணையாவிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அக்தரியின் சட்டைக்கு அளவெடுக்கும் வேலையை கண்ணையா பார்த்துவந்தார். அப்போது, அக்தரி தான் மறைத்து வைத்திருந்த கூர்மையாக கத்தியால் தையல்கடைக்காரர் கண்ணையாவை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், கண்ணையா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அக்தரி கண்ணையாவை தாக்குவதை அவருடன் வந்த ரியாஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த கொடூர தாக்குதலில் கண்ணையாவின் தலை துண்டிக்கப்பட்டது. கண்ணையாவை தலைதுண்டித்து கொலை செய்த 2 பேரும் கடையில் இருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர் கண்ணையாவை கொலை செய்த வீடியோவை சமூகவலைதள பக்கமான பேஸ்புக்கில் அக்தரியும், முகமதுவும் பகிர்ந்துள்ளனர். பின்னர் குற்றவாளிகள் இருவரும் பேஸ்புக்கில் மதிவிட்ட மற்றொரு வீடியோவில் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை காட்டி பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. தையல்கடைக்காரர் கண்ணையாவின் கொலை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கூட்டமாக கூட ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. கண்ணையாவை தலை துண்டித்து கொலை செய்த குற்றவாளிகள் அக்தரி மற்றும் ரியாசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அக்தரி உள்ளூரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வேலை செய்து வருவதாகவும் ரியாஸ் மளிகைகடை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்லனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கண்ணையா கொலை, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு குழுவை உதய்ப்பூருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதற்காக தையல்கடைக்காரர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது வேதனையான, வெட்கக்கேடான சம்பவம் ஆகும். நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடாதா? இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு, நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

இந்நிலையில், உதய்பூர் பிரிவு ஆணையாளர் ராஜேந்திர பட், மக்கள் அமைதியை காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னையாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் பட் கூறியுள்ளார். ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.