மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனவும், உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு என சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியினராக இருந்தால் அந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், பெண்ணாக கூறி சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும் என்று இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை சமர்ப்பித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.