ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது:-

அதிமுக தமிழகத்தில் மிக பலமான கட்சி. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவுடன் பாஜக ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை பாஜக பிரித்து விட்டது என்ற கருத்து தமிழகத்தின் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் பயத்தை காட்டுகிறது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக கட்சிகளுக்கு இருக்கும் பயத்தை ஒட்டியே இப்படியான கருத்தை பரப்புகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக தான் உள்ளது. இதை பாஜக ஏற்றுக் கொள்ளும். அதிமுக – பாஜகவுக்குள் எந்த போட்டியும் கிடையாது. சொத்துவரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகளுக்கு நாங்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.

திமுக அரசின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து உள்ளனர். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது. ஓராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை திமுக தலைமையிலான அரசு நிலை நாட்ட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போதை ஒழிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும். பாலியல் வழக்குகளில் குற்றவாளிக்கு உறுதியான தண்டனை வழங்க வேண்டும். 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.