எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல: சுப்பிரமணியசாமி

பாஜக சுப்பிரமணியசாமி “ஸ்டாலின் அவர்களே குருமூர்த்தி போல் அனைத்து பிராமணர்களும் கோழைகள் அல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி. இவர் இந்த மாதத்தின் துவக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக புகார் தெரிவித்து இருந்தார். மேலும், தேர்தல் ஆணைய விதியை மீறியுள்ளதால் திமுகவின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‛‛திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி கருத்து தெரிவித்துள்ளார். பிராமணர்களை இனஅழிப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுதான் பெரியாரின் கொள்கை என தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குரிமையை செலுத்த முடியாத நிலை கூட வரலாம். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுகவின் பதிவை தேர்தல் ஆணையத்தில் இருந்து நீக்க வேண்டும்” என கூறியிருந்தார். இது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு நேற்று சுப்பிரமணியசாமி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் “திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி 2022 ஜூன் 3 ஆம் தேதி தமிழ் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என டுவிட்டரில் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196இன் கீழ் வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் மன்மோகன் சிங், (2012) 3 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மேற்கொள்காட்டியுள்ளார். பொது அமைதியைக் குலைக்கும் வகையில், நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மேற்படி புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த கடிதத்தை தற்போது சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛ஸ்டாலின் அவர்களே, பிராமணர்களிடையே கடினமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள். குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.