திரவுபதி முர்மு வெற்றிபெற வாய்ப்பு: மம்தா பானர்ஜி

மராட்டியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு பலம் அதிகரித்துள்ளது. அதனால், ஜனாதிபதி தேர்தலில் அக்கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அவரது பெயரை அறிவிப்பதற்கு முன்பு, எதிர்க்கட்சிகளுடன் பா.ஜனதா ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பொதுநலனை கருதி, அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம். எப்போதுமே கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.