படிக்கட்டில் தவறி விழுந்து லாலு பிரசாத் யாதவுக்கு எலும்பு முறிவு!

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று உள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் அவர் தனது மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ரப்ரி தேவியின் வீட்டில் தங்கியிருக்கிறார். பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படும் அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் அவர் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே அதில் கட்டு போடப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சைக்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்த நிலையில், படிக்கட்டில் தவறி விழுந்து காயமடைந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.