டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், பல்வேறு இலக்குகளை நோக்கி செயல்பட துவங்கி உள்ளது. வரவிருக்கிற நாட்களில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளம் ஆக அது இருக்கும். நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரின் முயற்சிக்கான உணர்வு அடித்தளம் ஆக இருக்கும். அதுவே நமது வளர்ச்சிக்கான பயணத்தின் வழிகாட்டியாக இருந்து வருகிறது.

கிராமங்கள் மற்றும் ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான பெரும் பொறுப்பு நாட்டு மக்களுக்கும் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. உங்களுடைய முயற்சி மற்றும் உங்களது அனுபவம் ஆகியவற்றால், வருகிற நாட்களில் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் நிறைய விசயங்களை கற்று, புரிந்து கொள்வார்கள். சூரத்தில் இருந்து வெளிப்பட இருக்கும் இயற்கை விவசாய மாதிரியானது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கான மாதிரியாக மாறும்.

கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவது எளிதல்ல எனக்கூறியவர்களுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடி கொடுத்துள்ளது. கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவதோடு, ஏற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை கிராமங்கள் நிரூபித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.