அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதிமுகவுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது. எதற்கெடுத்தாலும் முதல்வரையும், திமுகவையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கை. யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த ஈபிஎஸுக்கு தெரியாதா?.

ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா?. அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஓபிஎஸ் பின்புலத்தில் திமுக இருப்பதாக ஈபிஎஸ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டிய நிலையில் ஆர்.எஸ்.பாரதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.