இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஜெய்சங்கர்

கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. இதனையடுத்து, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தள்ளது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததையடுத்து, பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார்.

இந்நிலையில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-

இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றமானது மற்றும் சிக்கலானது. இந்தியாவின் அண்டை நாட்டினர் என்பதனால் இலங்கை மக்களுக்கு நமது ஆதரவையளிக்க வேண்டும். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாத சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை. நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.