இலங்கையில் இருந்து 6 பேர் தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று 6 பேர் தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி காரணமாக பொதுமக்கள் நடுவீதியில் வந்து போராடி வருகிறார்கள். இதனால் உள்நாட்டு குழப்பம் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் ரூ. 4 லட்சம் கொடுத்து ஒரு படகில் ராமேசுவரம் நோக்கி வந்தனர். அந்த படகு தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு சென்று விட்டது.

நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை அந்த வழியாக சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பார்த்தனர். அவர்களை மீட்கும்படி இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பாலசுகந்தன் மற்றும் லிங்கேஸ்வரனை போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.